Tuesday, September 2, 2008

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) அணுசக்தி ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டம்.


இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒப்பந்தம். இந்தியாவை அமெரிக்க வல்லரசுக்கு அடிமைப்படுத்தும் ஒப்பந்தம். இந்திய அணு விஞ்ஞானிகள் தோரியத்தைப் பயன்படுத்தி அணுசக்தி தயாரிக்க மேற்கொண்டுள்ள சுயசார்பான ஆய்வை ஒழித்துக் கட்டி, யுரேனியத்திற்காக அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலைமை இந்தியா மீது தணிக்கும் துரோக ஒப்பந்தம்.

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்காவின் “ஹைடு” சட்டத்திற்குக் கட்டுப்பட்டது. இச்சட்டத்தின்படி, இந்தியாவின் அணுசக்தித் துறையை மட்டுமின்றி, நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் உரிமையினைக் கூட அமெரிக்கா எடுத்துக் கொண்டுள்ளது. இந்த உண்மைகளை மூடி மறைத்து விட்டு, நாட்டின் மின்சாரத் தேவையை நிறைவு செய்யவே இந்த ஒப்பந்தம் என்று அமெரிக்கக் கைக்கூலிகளும் ஆட்சியாளர்களும் அப்பட்டமாகப் புளுகுகின்றனர். உண்மையில் இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தேரில் இந்தியாவைப் பிணைக்கும் நாட்டு விரோத – மக்கள் விரோத ஒப்பந்தமாகும்.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம், பத்தாண்டுகளுக்குப் பின்னர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், அது நமது நாட்டின் மின்சாரத் தேவையில் ஏறத்தாழ 5% மட்டுமே நிறைவு செய்யும்.




இப்பெருந்தொகையைக் கொண்டு அனல், புனல், காற்றாலை, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் கூடுதல் மின்சாரம் பெற முடியும். இந்த வாய்ப்புகளைப் புறக்கணித்து விட்டு மிக அதிக விலை கொண்ட அணு மின்சாரம் தயாரிக்கத் துடிக்கிறது. அமெரிக்க விசுவாச அரசு.

இந்த உண்மைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC), கடந்த ஆகஸ்டு 15 போலி சுதந்திர நாளில் நாட்டின் அரைகுறை இறையான்மையையும் அமெரிக்காவுக்கு அடகு வைக்கும் இந்ந்த அடிமை ஒப்பந்தத்தின் நகல் எரிப்புப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் திருச்சியில் நடத்தியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் திருச்சி மையப் பேருந்து நிலையம் பெரியார் சிலையருகே காலை 11 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் போஜகுமார் தலைமை தாங்கினார் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இவ்வமைப்பின் மாவட்டக் கிளை அமைப்பாளர்களும் முன்னணியாளர்களும் வழக்குரைஞர்களும் தோழமை அமைப்பினரும் திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், இந்திய – அமெரிக்க அணுசக்தி துரோக ஒப்பந்த நகல் எரிக்கப்பட்டது. நெருப்பை பொட்டலம் கட்டிய கதையாக, இதனைத் தடுக்க முயன்ற போலீசார் முன்னணியாளர்களைக் கைது செய்து போலீசு வண்டியில் ஏற்றினர். அவ்வண்டியிலிருந்தும் முன்னணியாளர்கள் முழக்கமிட்டப்படியே எரிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைதான போராளிகள் அனைவரும் நிபந்தனை அடிப்படையில் பின்னர் விதலை செய்யப்பட்டனர்.


வீதியில் இறங்கி உணர்வுபூர்வமாக இவ்வமைப்பினர் நடத்திய இப்போராட்ட, அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிமைத்தனத்தையும் துரோகத்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளதோடு, உழைக்கும் மக்களிடமும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களிடமும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

பு.ஜ. செய்தியாளர்கள்.

0 comments: